காதலே என் காதலே.......

இது என் காதல் கதை இதில் சுவாரசியமாக எதுவும் பெரியதாக இருக்காது ஏன் என்றால் நான் மினுக்கும் ஆடை உடுத்தி டான்ஸ் ஆடும் நாயகன் அல்ல உங்களை போல் ஒரு சாதாரணமானவன்.

சூரிய குடும்பத்து ஒன்பது கோள்களும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வாயில் நுழையாத பெயரிடப்பட்ட பத்தாவது கோளும் வேலை எதும் இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றிவரும் போது ராகுவும் கேதுவும் சூரியனும் சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் அக்னிப் பார்வையால் எதிரிகளாய் பார்க்கும் எதோ ஒரு கணத்தில் அந்த அசம்பாவிதம் நடந்துவிட்டது. அது எந்த கணம் தெரியவில்லை குறித்து வைத்திருந்தால் சுப்பையா வாத்தியாரிடமாவது வகுப்பறையில் பரிகாரம் கேட்டிருக்கலாம்.

முகம் மூக்கு வாயெல்லாம் ரத்தம் வர குப்புற விழுந்தேன் கால் இடறி. கோபத்துடன் அந்நியனாய் சுருளில்லாத என் தலைமுடி மூக்கு கண்களை எல்லாம் மறைக்க திரும்பி பார்த்தால் காலை இடறச் செய்திருந்தது காதல்.

இத்தனை காலம் காதல் இருக்கிறது என்று சொன்னவனை நம்பினேன், காதல் என்ற ஒன்றே இல்லை கிடையாது என்பவனையும் நம்பினேன், ஆனால் நான் காதலிக்கிறேன் என்று சொன்னவனை மட்டும் விரோதியை போல் பார்த்து வந்த என்னைத்தான் இடறி விழச் செய்திருந்தது அந்த காதல்.


காதலிக்கிறவனை நம்பாமல் விரோதியாய் பார்த்து வந்திருந்தாலும் காதல் என் வாழ்க்கையில் புதிதல்ல. உணர்வுகள் புரிய ஆரம்பித்த இறுதி எண்பதுகளிலிருந்து காதல் பலமுறை என்னுள் வந்து போயிருக்கிறது ராதாவாய், அமலாவாய், குஷ்புவாய், சிம்ரனாய், ஜோதிகாவாய், பாவனாவாய், நயந்தாராவாய் படம் பார்க்காமல் பாடலில் மட்டுமே பார்த்திருந்தாலும் கண்கள் இரண்டால் கட்டி இழுக்கும் புது நடிகை சுவாதி வரை. தமிழ் நடிகைகளை தவிர வேறு தெரியாமல் கிராமத்து சூழலில் வளர்ந்த என்னை கல்லூரியில் படிக்கும் போது ஹிந்தியில் ஏபிசிடி கூட எனக்கு தெரியாது என்ற போதும் ரங்கீலா என்ற படத்திற்கு நண்பர்கள் கூட்டி சென்ற விபத்தி்ன் முதற்கொண்டு ஊர்மிளா மதோந்கரும் இவர்களுக்கு போட்டியாக. இதில் ஆரம்பித்து ஐஸ்வர்யா ரை, ப்ரியங்கா சோப்ரா, வித்யாபாலன் என வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பெண்கள் காதலாய் வந்து போயிருந்ததால் காதல் ஒன்றும் புதிதல்லாத என்னை குப்புறதள்ளியிருந்தது அந்த காதல்.

சதையை மட்டும் கண்டால்
காதல் தெரியாது
காதல் வந்த பின்னால்
கண் மண் தெரியாது

என ஒரு கவிஞன் சொன்ன பின்பும் காதலையோ காதல் உணர்வுகளையோ நம்பாமல் நேசிக்காமல் ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகளையும், ஜட்டி கதைகளையும் தேடி படித்து வந்த என்னைத்தான் குப்புற தள்ளியிருந்தது அந்த காதல்.

பின்னர் எப்படி அதை அந்த கணத்தை அசம்பாவிதம் என்கிறாய் என கேட்பவர்களுக்கு சொல்ல வார்த்தை வராமல் என் மனம் தடுமாறுகிறது நெஞ்சம் விம்முகிறது கோபிகாவுக்கு கல்யாணமாம்.

வெட்ட வெட்ட துளிர்க்கும் செடி போல என்னுள் துளிர்த்து வந்திருந்த காதல்கள் வருங்காலங்களில் இனியும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையுடன் குப்புற விழுந்த நான் எழுந்து ஒட்டிக்கொண்ட மணலை தட்டிவிட்டு நிமிர்ந்து நடக்கிறேன் 'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய்' என பாடலை ஹம் செய்தபடியே!

இப்படிக்கு
அதீதன் (என்கிற )
அரூபன் (என்கிற )
விசித்திரன் (என்கிற )
ஆயில்யண்